தமிழ்நாட்டில் ஆரம்ப கால விடுதலைப் போராட்டம் - TNPSC UNIT 8 and 9

தமிழ்நாட்டில் ஆரம்ப கால விடுதலைப் போராட்டம்:

1.முத்துவடுகநாதர்:

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ் நாட்டில் பலர் விடுதலை வேட்கை கொண்டு ஆங்கிலேயருக்கெதிராக போராடிய வரலாறு உண்டு.பாளையக்காரர்களில் சிலர் வெள்ளையர்களை எதிர்த்து வரி கொடுக்க மறுத்தனர்.அவர்களில் துணிச்சல் மிக்கவர் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதர் ஆவார். இவர் பாரதக் கதை மூலம் மக்களுக்கு வீரம் புகட்டும் முயற்சியில் பாடுபட்டார்.வரி கட்டும்படி வந்த அறிக்கையை கிழித்து எறிந்தார்.காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்தார். பின்னர் அவரது மனைவி வேலு நாச்சியார் அவ்வாறு வந்த கடிதத்தை எட்டாகக் கிழித்து வெள்ளையருக்கு அனுப்பி வீர காவியம் படைத்தார். 

2.வீரபாண்டிய கட்டபொம்மன்:

அடுத்து நெல்கட்டான் செவல்கோட்டை அதிபதியான புலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக சில வெற்றிகளைப் பெற்று அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனும் ஆங்கிலேயருக் கெதிராகப் போர்க்கொடி எழுப்பினார். தானும் வரி செலுத்தாமல், பிறரையும் வரி கட்டக் கூடாது என்று கூறி ஒன்பது ஆண்டு காலம் போராடினார்.இறுதியில் புதுக்கோட்டை மன்னர் பிடித்துக் கொடுத்து விட்டார். ஆங்கிலேயர்களால் தூக்குத் தண்டனை பெற்ற கட்டபொம்மன் தூக்குக் கயிற்றை தானே மாட்டிக் கொண்டு வீரமரணம் அடைந்த அவரது வாழ்க்கை விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு வீரகாவியமாகத் திகழ்கிறது.

3.வேலூர் கலகம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதன் முதலில் ராணுவப் புரட்சி செய்த பெருமை தமிழ்நாட்டு படை வீரர்களையே சாரும். 1806, ஜூலை 10-ம் தேதி வேலூர் கோட்டையில் வைக்கப் பட்டிருந்த இந்தியப் படை வீரர்கள் புரட்சி செய்து ஆங்கில அதிகாரிகளையும் வீரர்களையும் கொன்றனர். ஆனால் இந்த ராணுவப் புரட்சி விரைவில் அடக்கப்பட்டு விட்டது. இந்தப் புரட்சி 1857-ல் நடந்த பெரும் சிப்பாய் கலகத்திற்கான ஒத்திகை என்று கூட கூறலாம்.

1857-ல் வட இந்தியாவில் சிப்பாய் கலகம் தோன்றிய போது அது தமிழ் நாட்டிலும் எதிரொலித்தது. அப்போது கம்பெனி ஆட்சிக் கெதிராக சென்னையில் சுவரொட்டிகள் காணப்பட்டன. இந்தியாவை விடுவிக்க ஒரே வழிதான் உள்ளது. அதுவே பயங்கர யுத்தம். அது சுதந்திர யுத்தம்' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் நாடு அப்போது புரட்சியில் ஈடுபடாமல் பார்த்துக் கொண்டவர் ஹைதராபாத் நிஜாம் ஜாலர்ஜங் ஆவார்.

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கில எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்ற போதிலும் முழுமையான தேசிய இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் தோன்றியது.

Post a Comment

Previous Post Next Post