ஹரப்பா நாகரிகம்

சிந்து பள்ளத்தாக்கில் மேற்கு பஞ்சாபிலுள்ள ஹரப்பா சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சாதாரோ ஆகிய இரு இடங்களிலும்தான் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விரண்டு இடங்களும் தற்போது பாகிஸ்தானில் உள்ளன. இந்த அகழ்வாய்வுகளின் பயனாக ஒரு சிறந்த நாகரிகம் சிந்து வெளியில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இந்த நாகரிகம் ‘சிந்துவெளி நாகரிக' என வழங்கப்பட்டது. பின்பு சிந்துவெளிக்கு அப்பாலும் இந்த நாகரிகத்தின் தடயங்கள் பரவியிருந்தமையால் இது முன்புபோல் 'சிந்து நாகரிகம்' என அழைக்கப்பட்டது. பின்னர் முதலில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவுகூறும் வகையில் ‘ஹரப்பா நாகரிகம்' என்றும் இது வழங்கப்படுகிறது.

முக்கிய இடங்கள்:

பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப் பட்டபோதிலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு:

  1. சிந்துவிலுள்ள கோட் டிஜி.
  2. ராஜஸ்தானிலுள்ள காலிபங்கன்.
  3. பஞ்சாபில் ரூபார்.
  4. ஹரியானாவில் பனவாலி, 
  5. குஜராத்திலுள்ள லோத்தல், சுர்கோடாடா, மற்றும் தோலவிரா போன்ற பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும்.
  6. சிந்துவெளி நாகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ. இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.
தோற்றமும் வளர்ச்சியும்:
  • கடந்த எண்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளின் பயனாக ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள பயன்படுகின்றது.
இதனை நான்கு முக்கிய நிலைகளாகப் பகுத்து அறியலாம் அவை:
  1. ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலை.
  2. ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை (கி.மு. 3500 - 2600).
  3. ஹரப்பா பண்பாட்டின் உச்சநிலை (கி.மு. 2600 - 1900).
  4. ஹரப்பா பண்பாட்டின் இறுதிநிலை (கி.மு.1900-1300)

1.ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலை:

  • கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம்.
  • மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்திலுள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தை கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன.
  • இக்காலத்தில், மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர்.

2.ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை (கி.மு. 3500 - 2600):

  • மக்கள் சமவெளிகளில் பெரும் கிராமங்களை உருவாக்கி அங்கு வாழ்ந்தனர். இக்காலத்தில்தான் சிந்து சமவெளியில் நகரங்கள் தோன்றி வளரத் தொடங்கின.
  • கிராமப்புற வாழ்க்கையிலிருந்து மக்கள் நகர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.
  • ஆம்ரி, கோட்டிஜி ஆகிய இடங்களை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
3. ஹரப்பா பண்பாட்டின் உச்சநிலை (கி.மு. 2600 - 1900):

  • இக்கட்டத்தில் பெரிய நகரங்கள் எழுச்சி பெற்றன.
  • காலிபங்கன் அகழ்வாய்வுகள் அங்கிருந்த நகர அமைப்புகளையும், நகர்புறக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
4. ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை (கி.மு. 1900 - 1300):

  • அதன் சிதைவு தொடங்கியது. வோத்தல் அகழ்வாய்வுகள் இந்த நிலைக்கு தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தன. 
  • லோத்தல் நகரமும் அதன் துறைமுகமும் மிகவும் பிற்காலத்தில் தான் நிறுவப்பட்டன.
  • வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய தடுப்புச்சுவரை இந்நகரில் காணமுடிகிறது. 
  • மெசபடோமியா மற்றும் இந்தியாவின் பிறபகுதிகள் ஆகியவற்றுக்கிடையிலான மிகப்பெரிய வாணிப மையமாக லோத்தல் திகழ்ந்தது.
ஹரப்பா பண்பாட்டின் காலம்:

  • 1931- ஆம் ஆண்ட சர்ஜான் மார்ஷல் மொகஞ்சாதாரோவின் காலத்தை கி.மு. 3250 கி.மு. 2750 என மதிப்பிட்டார். பின்னர், பல்வேறு புதிய இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 
  • எனவே. புதிய தகவல்களின் அடிப்படையில் ஹரப்பா பண்பாட்டின் காலமும் அவ்வப்போது அறிஞர்களால் பதியதாக மதிப்பிடப்பட்டது.
  • ரேடியோ கார்பன் முறையில் காலத்தை கணக்கெடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஓரளவுக்கு துல்லியமான காலக்கணிப்பும் செய்யப்பட்டது. 
  • 1956-ஆம் ஆண்டு ஃபேர்சர்விஸ் என்பவர் ஹரப்பா பண்பாட்டின் காலத்தை ரேடியோ கார்பன் அடிப்படையில் கி.மு. 2000 - கி.மு. 1500 என்று மதிப்பிட்டார். 
  • 1964-ஆம் ஆண்டு டிபி. அகர்வால் இந்த பண்பாட்டின் காலத்தை கி.மு. 2300 - கி.மு. 1750 என முடிவு செய்தார்.
ஹரப்பா பண்பாட்டின் சிறப்புக் கூறுகள்:

  • ஹரப்பா பண்பாடு அதன் தனிச்சிறப்பு வாய்ந்த நகர அமைப்புக்கு பெயர் பெற்றதாகும். 
  • தெருக்கள் ஒவ்வொன்றும் குறுக்கு நெடுக்காகவும்நேர்கோட்டிலும் கிரிட் முறையில் அமைந்திருந்தன. ஒவ்வொரு தெருக்களும் 90 டிகிரி கோண அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நகரமானது பல்வேறு செவ்வக அமைப்புடன் காணப்பட்டது. 
  • ஹரப்பா, மொகஞ்சாதாரோ, காலிபங்கன் போன்ற பெரிய நகரங்களில் மேடான பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. கோட்டைகள் ஒவ்வொன்றும் களிமண்கற்களாலான மேடுகள் மீது அமைக்கப்பட்டிருந்தன. 
  • கோட்டையின் கீழ்ப்பகுதியிலிருந்த நகரத்தில் செங்கற்களாலான வீடுகள் இருந்தன. இவற்றில் சாதாரணமக்கள் குடியிருந்தனர்.
  • பெரும்பாலான கட்டிடங்கள் அனைத்தும் செங்கற்களாலானவை. கற்பாறைகளாலான கட்டிடங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர்க் குழாய்கள் ஹரப்பா பண்பாட்டின் மற்றொரு சிறப்புக் கூறாகும். வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவுநீர்க் குழாய்கள் அனைத்தும் தெருக்களின் கழிவுநீர்ப்பாதையுடன் இணைக்கப்பட்டிருந்தன. இக்குழாய்கள் பெரும்பாறைக் கற்களோ அல்லது செங்கற்களாலோ மூடப்பட்டிருந்தன.

Post a Comment

Previous Post Next Post