காந்தியடிகள் பற்றிய கட்டுரை


காந்தியடிகள் பற்றிய கட்டுரை அல்லது நான் விரும்பும் தலைவர், தேசிய தலைவர் பற்றிய கட்டுரை போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதும் போது கீழுள்ள கட்டுரையை பயன்படுத்தி கொள்ளலாம்.

காந்தியடிகள்

முன்னுரை :

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்றார் வள்ளுவர். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, மடியின்மை அன்புடைமை, அருளுடைமை ஆகிய அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கினார். அதனால்தான் கவியரசர் தாகூர் மகாத்மா என்ற மாமகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

பிறப்பும் கல்வியும் :

அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 2-ஆம் நாள் காபாகாந்திக்கும் புத்திலிபாய்க்கும் நன்மகனாய்த் தோன்றினார். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற காந்தியடிகள் இங்கிலாந்து சென்று சட்டக் கல்வி பயின்றார்.பின்னர், தென்னாப்பிரிக்கா சென்றார்.அங்கு இனவெறியையும். நிறவெறியையும் எதிர்த்து, கறுப்பர் இன மக்களுக்கு உரிமைகள் பெற்றுத் தந்தார். 1915-இல் இந்தியா திரும்பினார்.

இருவகைப் புரட்சி:

காந்தியடிகள் ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களை எதிர்த்துச் சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார். “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே! அறத்தின் வழி நின்று, எதிர்த்து நில்! ஆங்கிலப்படை வீரர் தாக்கினால், தாங்கிக் கொள்! எதிர்த்துத் தாக்காதே! கைது செய்தால் அகமகிழ்வோடு செல்! மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!” என்றார்.

தீண்டாமையே வேண்டாம்! பெண்ணடிமையோ பெருங்குற்றம்! சாதி மத வேறுபாடுகள் வேதனை தருவன! மறவழி மரண வழி! கள்ளுண்டல் நஞ்சுண்டல்! கோழைத்தனம் கூடாது! சோம்பல் அடிமைத்தனம் என்பவை காந்தியடிகளின் சிந்தனைகள்.

காந்தியடிகளின்பண்பு நலன்கள்:

காந்தியடிகள் அகிம்சை, எளிமை, எளியவர்பால் அன்பு, தன்னல மறுப்பு, பகைவரையும் மன்னிக்கும் பரந்த உள்ளம், சுதேசிப் பொருள் மீது பற்று ஆகிய அரிய பண்புகள் காணப்பட்டன. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றைக் கண்டுபிடித்து அந்நியரை விரட்டிய உலகத்தலைவர் காந்தியடிகள் ஒருவரே. காலந்தவறாமை, புலால் உண்ணாமை, பொய்பேசாமை என்பனவும் அண்ணலின் வாழ்வில் பூத்துக் குலுங்கிய பண்புமலர்களாகும்.

விடுதலைப் போரின் வெற்றி :

வெள்ளையர் ஆட்சியை அகற்றும் போராட்டத்தை அண்ணல் அறவழியில் நடத்தினார். உப்புக் காய்ச்சும் அறப்போர், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, தனிநபர் அறப்போர், உண்ணாநோன்பு என்னும் வகையில் அண்ணலின் அறப்போர் அமைந்தது. இறுதியாக 'வெள்ளையனே வெளியேறு' என்னும் அறப்புரட்சியில் ஈடுபட்டார்; வெற்றி பெற்றார்.

முடிவுரை:

இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த தந்தையான அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் சுட்டவனுக்குக் தீங்கிழைக்கக் கூடாது என்றார். ஆம். அவர் இந்தியாவின் இயேசுவாய் மறைந்தார். காந்தியடிகள் மறையவில்லை, நம்மோடு இருக்கிறார், நம்மோடு கலந்துவிட்டார் என்று எண்ணுதல் வேண்டும்.

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க!
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய், புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்
-பாரதியார்

உலக உத்தமர் காந்தியடிகளை பாரதியார் இவ்வாறு பாராட்டுகிறார்.

வீரம் உடலின் ஆற்றல் அல்ல உள்ளத்தின் பண்பு-காந்தியடிகள்

Post a Comment

Previous Post Next Post