பொருட்காட்சி பற்றி கட்டுரை

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைப் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்
  • முன்னுரை
  • அரசுப் பொருட்காட்சி
  • முன்னுரை
  • இனிய காட்சி அலங்காரங்கள்
  • பல்துறை அரங்குகள்
  • அங்காடிகள்
  • விளையாட்டுப்பகுதி
  • உணவு அங்காடிகள்
  • பொழுதுபோக்கு
  • முடிவுரை

முன்னுரை:

எங்கள் ஊரில் அரசுப் பொருட்காட்சி நேரு திடலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 50வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சிக்கு நான் எனது பெற்றோருடன் சென்று வந்தேன். நண்பர்களும் உடன் வந்தனர். அங்கே நான் கண்டு மகிழ்ந்த நிகழ்வுகள் குறித்து இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அரசுப் பொருட்காட்சி:

நகரத்தின் ஒரு பெரிய பகுதியை அரசு தெரிவு செய்து அதில் நடத்தப்படும் பொருட்காட்சி ‘அரசுப் பொருட்காட்சி' எனப்படும். அரசுப் பொருட்காட்சி என்பதால் அரசின் செயல்பாடுகள், ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிய குறிப்புகளை அங்கே காணலாம். 

இனிய காட்சி அலங்காரங்கள்:

அரசுப் பொருட்காட்சி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரண்மனை போன்ற வடிவத்தில் முகப்புப் பகுதி வடிவமைக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய தோரண வாயிலும், மரக்கிளைகளில் தொங்கும் வண்ண விளக்குகளும் கண்களைப் பறித்தன. வண்ண வண்ணப் பலூன்கள் ஆங்காங்கே மரக்கிளைகளில் கயிற்றினால் கட்டி பறக்க விட்டிருந்தனர்.

பல்துறை அரங்குகள்:

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் இப்பொருட்காட்சியில் மத்திய, மாநில அரசு நிறுவனங்களை சார்ந்த சுமார் 150 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். பல்வேறு துறைசார்ந்த அரங்குகளின் உள்ளே சென்று அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

அங்காடிகள்:

நூற்றுக்கணக்கான அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு பல்வேறு அங்காடிகள் இருந்தன. தேவையான சில பொருட்களை மட்டும் என்னுடைய தாயார் வாங்கினார்கள். 

விளையாட்டுப்பகுதி:

விண்ணைத்தொடும் அளவிற்கு உயரமான இராட்டினங்களை கண்டோம். இராட்சச இராட்டினம், குவளை இராட்டினம், டிராகன் இராட்டினம் என பல்வேறு இராட்டினங்களில் ஏறி மகிழ்ந்தேன். சிறிய இரயில் வண்டியில் பயணம் செய்தது; சென்ற எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

உணவு அங்காடிகள்:

நாகரீக மக்களின் தேவையை உணர்ந்து உணவு விற்பனை நடைபெற்றது. பெரியவர்களும் குழந்தைகளும் உண்டு மகிழ்ந்தனர். நாங்களும் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பனிக்கூழ் முதலியவற்றை வாங்கி அனைவரும் பகிர்ந்து உண்டோம். 

பொழுதுபோக்கு:

சூரியன் மறைவுக்குப் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மேடையில் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களித்தோம். 

முடிவுரை:

அரசின் இதுபோன்ற பொருட்காட்சிகள் நமது மாநில அரசின் திட்டங்களையும் செயல்பாட்டினையும், சாதனைகளையும் மக்கள் அறிய வழிவகை செய்கிறது. புதிய பொருட்கள் சந்தையில் வரும்போது அதன் விலை, பயன்பாடு போன்றவற்றை அறியலாம். பொருட்காட்சியைப் பெற்றோருடனும், நண்பர்களுடன் கண்டு மகிழ்ந்தது எப்பொழுதும் என் நினைவில் இருந்து நீங்காத ஒன்றாகும்.

Related: சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

Post a Comment

Previous Post Next Post