பாரதிதாசனின் தமிழ்ப்பற்று குறித்து கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
- முன்னுரை
- பாவலர் பாரதிதாசன்
- மொழிப்பற்று
- தமிழர் சமுதாயம்
- முடிவுரை
முன்னுரை:
உடலைப் பொலிவுள்ளதாக்க உடலை இயற்கையைப் பாடுவோர். அன்னையைப் பாடுவோர்; பண்பைப் பாடுவோர் எனப் பல கவிஞர்களாய் வாழ்ந்துள்ளனர். எனினும் உயிரை, உணர்வைப் பாடுவது போல்
"தமிழைத் தன் உயிராக்கி உணர்வைத் தன் மதியாக்கி”
புரட்சிக்கவி பாடியவன் புதுவைக்குயில் பாரதிதாசன். அவரது தமிழ் உணர்வை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். பாவலர் பாரதிதாசன்:
"தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
என்று வாயினிக்க, கேட்போர் செவியினிக்கப் பாட்டிசைத்தப் பாவலர் இவர்.
மொழிப்பற்று:
அன்னைத் தமிழ் மீது அளவில்லாப் பற்றுடையவர் பாரதிதாசனார். “தமிழே அவர்; அவரே தமிழ்”.
"நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்" எனக் கூறினார். “மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத் தமிழ்க்கீடில்லை என்றுரைப்போம்" - என்று உரைத்தார்“ஆடற்றமிழே நீ என்றன் ஆவி” என்று தமிழைத் தன் உயிராகக் கூறும் பாவலன்.
தமிழை வானாகவும் தன்னை வெண்ணிலாவாகவும்
தமிழை வாளாகவும் தன்னை வீரனாகவும் தமிழை இசையாகவும் தன்னை மகரயாழாகவும்
தமிழை ஒளியாகவும் தன்னைக் கண்ணாகவும் குறிப்பிடுகிறார்.
"கனிச்சுருள், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, இளநீர், பசும்பால் ஆகியவற்றின் சுவையைவிடச் சுவைமிக்கது தமிழ்" என்று தமிழின் பெருமையை உலகறியச் செய்கிறார்.
தமிழர் சமுதாயம்:
தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்த பாரதிதாசன். தமிழர் மனங்களும் பண்பட வேண்டும் என்ற உயர்ந்த நெறியில் தன் உணர்வுகளைப் புலப்படுத்துகிறார்.
"சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே” என்று சாதி வெறியரைச் சாடுகிறார். "மலைவாழை அல்லவோ கல்வி - நீ வாயார உண்ணுவாய் போய் என் புதல்வி” என்ற பெண் கல்வியின் முதன்மையினைக் கூறுகிறார். "காக்கையிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு - நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு" என்று ஒற்றுமையை வலியுறுத்துகிறார். "புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என்று கூறித் தீய உலகை அழித்து, புதுத் தமிழ் உலகம் படைக்கத் துடிக்கும் இளமை உணர்வை வெளிப்படுத்துகிறார்.
முடிவுரை:
“சொல் புதிது, பொருள் புதிது" என்ற பாரதியாரின் அடிகள் பாரதிதாசனின் பாட்டுக்கும் பொருந்தும். மொழி உணர்வோடு சமூக கொடுமைகளைச் சாடிய அவரது கவிகள் ஏவுகணைகளாகும். அருந்தமிழை அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தமிழ்க் குயில் தமிழ்த்தாயின் திருவடியில் சென்று தங்கிவிட்டது. அவரது இன்பத்தமிழ், தமிழின உணர்வு கொண்டு நாமும் வாழ்வோம்.
Tags:
கட்டுரை