கோரக்கர் 18 சித்தர்களில் ஒருவர். போகரின் சீடரான கோரக்கர் கலியுக முடிவில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலியுக முடிவு பற்றி கோரக்கர் கூறிய பாடல்களை இப்போது பார்ப்போம்.
சந்திரரேகை பாடல் எண் 26
அந்தநாள் அக்காலம் நமது நாட்டில் அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ சாற்றிடுவேனாகாயந் தனிற் களங்கம் விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும் மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
பாடல் விளக்கம்:
கலியுகம் முடியும் போது எல்லா விதமான பஞ்சங்களும் துன்பங்களும் உண்டாகும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.
சந்திரரேகை பாடல் எண் 27
கதிரவனுங் கடும்பனியுங் காருங் கோடைக் கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில் மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல மகாரூப ரூப வெளி மதி மேற் காணும் துதியாக நாழி இரு இருபத்தைந்தில் தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும் சதியாக வடதேசம் தன்னி லோர்பால் கடல்பொங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.
பாடல் விளக்கம்:
சூரியனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் இருக்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக அருகில் நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
சந்திரரேகை பாடல் எண் 28:
எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம் ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார் பங்கமுடன் பாவி வெள்ளைப் பாத கன்றான் பக்தர்களைச் சிறை கொள்வன் பட்ச மின்றி மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும் சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச் சடுதியினில் வருவேவென்றறைந்து போனார்.
பாடல் விளக்கம்:
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.
கோரக்கரின் சந்திரரேகை 200 என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.