கேது திசை பலன்கள்-புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் கேது திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

கேது மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

பாடல் 260

ஆமென்ற கேதுதிசை வருஷம்யேழு 

அதனுடைய புத்திநாள் நூத்திநாற்பத்தியேழு 

போமென்ற அதன் பலனைப் புகலக்கேளு 

புகழான அரசர்படை ஆயுதத்தால் பீடை 

தாமென்ற சத்துருவால் வியாதிகாணும் 

தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம் 

நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாகும் 

நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே

பாடல் விளக்கம்

கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும். இதில் இவரது சுய புத்தியான ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவை தான் என்று சொ வோம். நன்கு கவனித்து கேட்பாயாக! புகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள் ஏற்படும். வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால் வியாதியும் நேரும். பெரும் பொருட்சேதமும் அங்கத்தில் குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும். தான்வசிக்கும் நகரத்தில் பலவகைச் சூனியங்களும் உருவாகும், நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித் துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

பாடல் 261

பகையான கேதுதிசை சுக்கிரபுத்தி 

பாங்கில்லா மாதமது பதினாலாகும் 

தகையான அதன் பலனைச் சாற்றக்கேளு 

தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும் 

நகையான பூஷண்ங்கள் நசிவதாகும் 

நாரழையாள் தன்னுடனே அபமிருத்துகாணும் 

வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி 

மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வன்காணே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! குறைதல் இல்லாத பகைவரால் விலங்கு பூணுதல் நேரும். பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும். மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும். எனினும் தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவி மக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

கேது மகாதிசை, சூரிய புத்திப்பலன்கள்

பாடல் 262 

பாரப்பா கேது திசை சூரியபுத்தி 

பாங்கான நாளதுவும் நூத்தி இருபத்தி 

ஆறு பாரப்பா அதன் பலனைச் 

சொல்லக்கேளு ஆகாதசத்துருவால் 

அக்கினியும் பேயும் சேரப்பா சேர்ந்துமே 

கூடிக்கொல்லும் சேர்ந்துநின்ற 

தந்தைகுரு மரணமாகும் வீரப்பா 

வீண்சிலவு மிகவேயாகும் வீடு விட்டு காஷாயம் பூணுவானே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! மனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும். அக்கினி பயமும் பேய், பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும். இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும், குருநாதர்க்கும் மரணம் ஏற்படும். வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 263 

பூணுவான் கேதுதிசை சந்திரபுத்தி 

புகழான மாதமது நாலுமூணும் 

ஆணுவான் அதன் பலனை 

அரையக்கேளு ஆயிழையாள் விலகி 

நிற்பள் அதமமாகும் தோணுவான் 

தோகையரும் புத்திரரும் பாழாம் 

தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும் 

நாணுவாள் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து 

நன்றாகமடிந்திடுவான் நலமில்லைதானே

பாடல் விளக்கம்

இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக் கூறுவோம். கவனித்துக் கேட்பாயாக! மனைவியானவள் , இச்சாதகனுடன் மனம் வேறுபட்டு விலகி நிற்பாள். அதர்மம் நேரும். மனைவி மக்கள் பாழடைவர். மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள் சேதமடைதலும் நேரும். தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும். இது கண்டு இச்சாதகன் நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல் 264

தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி 

தாழ்வான நாளதுவும் நூத்தியிருபத்தியேழு 

வானென்ற அதன்பலனை வழுத்தக்கேளு 

வண்மையுடன் சத்துரு தானே உண்டாம்

கோனென்ற திரவியமும் சேதமாகும் 

கோதையரால் குலமதுவு நாசமாகும் 

தேனென்ற திரவியமும் சேதமாகும் 

தெகுட்டாத துணை தம்பி தீதுண்டாமே

‌பாடல் விளக்கம்

இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வலிமையுள்ள இனஜன பந்துக்களும் தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர். மனையில் சிலர் கோள் சொல்லுதலால் குடும்பம் பாழாகும். பெண்களால் குல நாசம் ஏற்படும். நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும். சகோதர விரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 265 

உண்டான கேதுதிசை ராகுபுத்தி 

உண்மையில்லா நாளதுவும் வருடம் 

ஒன்று நன்றாகும் நாளதுவும் மூவாறாகும் 

நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு 

விண்டாகுஞ் சத்துருவால் சோரபயமாகும் 

வினையான மனைவிதன்னால் வீண்கலகமாகும் 

ஒன்றாகும் உன் உடம்பில் பிணியுண்டாகும்

 உறுதியில்லா உந்தெய்வம் ஓடுந்தானே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18 நாள்களாகும். நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுவோம். கவனமாய்க் கேட்பாயாக! பகைவராலும், திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும். சந்தேகம் கொண்ட மனைவியினால் குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும். தேகத்தில் வியாதி காணும், இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப் போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, வியாழன் புத்திப்பலன்கள்

பாடல் 266 

காணவே கேதுதிசை வியாழபுத்தி 

கனமான மாதமது பதினொன்றாகும் 

தோணவே நாளதுவும் ஆறதாகும் 

துகையான தனங்களும் புத்திரனாலுண்டாம் 

பூணவே மூவுடையாள் நிர்த்தனம் 

செய்வாள் பூமிதனில் வெகுலாபம் 

பொருந்திக்காணும் நாணவே ராசாங்க யோகம் பெற்று நன்றாக 

சுகம் விளையும் யோகந்தானே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும், இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும். மனம் விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சி பொங்கும். பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாக வந்தடையும். வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்து மனச்சோர்வகற்றும். பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

கேது மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

பாடல் 267 

தானென்ற கேதுதிசை சனியின்புத்தி 

தாழ்வான மாதமது பதிமூன்றாகும் 

நானென்ற நாளதுவும் ஒன்பதாகும் 

நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு 

வானென்ற வான்பொருளும் கேடுவாகும் 

வகையான மனைவியுடன் மக்களதும்போம் 

மானென்ற பதிமூன்றில் மரணமாவான் 

மனக்கவலை ரொம்ப உண்டு மாள்வான்பாரே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வானளாவிய செல்வமும், பெரும் பொருளும் சேதம் அடையும். நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவி மக்கள் கை விட்டுப் போதலும் நேரும். மூன்று மாத கால அளவில் மரணமும் நேரும். மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்கு மரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

கேது மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

பாடல் 268 

பாரப்பா கேதுதிசை புதனார்புத்தி 

பாங்குள்ள மாதமது  பதினொன்றாகும் 

சேரப்பா நாளதுவும் இருபத்தியேழு 

சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு 

வீரப்பா கொண்டு நின்ற மயக்கம் போய்நீ 

மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய் 

சீரப்பா லட்சுமியும் சேர்ந்துகொள்வாள் 

தீங்கில்லா மனக்கவலையில்லை காணே

பாடல் விளக்கம்

கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாய்! இதுவரை பற்பல இன்பங்களில் வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும் ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும். திருமகள் இவன் மனையை விரும்பிச் சேர்வாள். எனவே தீங்கொன்றும் நேராது எவ்வித மனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பாடினேன்.

Post a Comment

Previous Post Next Post