புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் குரு திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.
வியாழன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
பாடல் 233
தானென்ற வியாழதிசை ஒருபத்தாறாம் தன்மையுட னதன்புத்தி வருஷம் ரெண்டு நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு நன்றாக அதன்பலனை நவிலக்கேளு கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு குறைவில்லா திரவியங்கள் வெகுலாபமுண்டாம் ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம் மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்
பாடல் விளக்கம்
தன்னிரகற்ற வியாழ பகவானின் திசா காலம் வருடம் 16 ஆகும். அதில் அவரது புத்தி 2 வருடம் 1 மாதம் 18 நாள்களாகும். நன்மை தரத்தக்க வகையில் அவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஓர் அரசனைப் போல் மகிழ்வுடன் வாழும் வசதியான வாழ்வு நேரும். குருவினுடைய அருளும் வாய்க்கும். குறைவில்லா வகையில் திரவியங்கள் வந்து சேர்தலும் நிறைந்த லாபம் வந்தடைவதோடு மனைவியால் மனமகிழ்ச்சி யுண்டாதலும் மங்களகரமான சுப சோபனம் நேர்தலும் இல்லத்தில் திருமணகாரியங்கள் நிகழ்தலும் நேரும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
வியாழன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்
பாடல் 234
வளருமென்ற வியாழதிசை சனியின் புத்தி
வாகான மாதமது முப்பதுவேயாகும் வளருமென்ற நாளதுவும் பனிரெண்டாகும்
வன்மையுடன் அதன்பலனை வழுத்தக்கேளு வளருமென்ற கெர்ப்பமுடன் போகம் சித்தி
வகையுடன் திரவியமும் பூஷணமுஞ்சேரும் வளருமென்ற மன்னன் போல் வளருமது யோகம்
வாகன தண்டிகையும் வாகனமுமுண்டாம்
பாடல் விளக்கம்
வியாழ மகாதிசையில் சனிபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். கொடைத் தன்மை மிகு சனிபகவான், அக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: புத்திரோற்பத்தி ஏற்படுதலும் இன்பம் நேர்தலும், எண்ணிய எண்ணங்கள் எண்ணிய வண்ணம் ஈடேறுதலும் நேரும். வெகு திரவியமும் பொன்னாபரணம் புத்தாடை சேர்க்கையும் ஏற்படும். எழுச்சிபெறும் அரசனைப் போல் சம்பத்தும் கனக தண்டிகையும் வாகனாதிகளும் ஏற்பட்டு வெகு பிரபலனாவான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
வியாழன் மகாதிசை, புதன் புத்திப்பலன்கள்
பாடல் 235
உண்டாகும் வியாழதிசை புதனார்புத்தி
உண்மையுள்ள மாதமது மூவொன்பதாகும் தென்றாகும் நாளதுவும் ஆறதாகும்
தெருட்டாத அதன்பலனை தென்புடனேகேளு உண்டாகு மலைபோலே பெருகுஞ்செல்வம்
குறைவில்லா மாதர் மைந்தர் கட்டுடனே வாழ்வான் சென்றாகும் திருவுடனே பட்டங்கட்டும்
திருவான லெட்சுமியும் சேர்வள்பாரே
பாடல் விளக்கம்
வியாழ மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். அக்காலகட்டத்தில் ஏற்படும் பலாபலன்களாவன: மலைபோலச் செல்வமானது பெருகிக் காணும். குறைவில்லாத மனைவியுடனும் குழந்தைகளுடனும் கட்டுக்கோப்பான நல்வாழ்வினைச் சாதகன் பெறுவான். வெகுதனமும், பெரும் புகழும் கொண்டு அரச சம்பத்தும் பட்டம் பதவிகளும் பெறுவதோடு இவனது மனைவியில் திருமகள் நிலை கொண்டு உறைவாள் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
வியாழன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
பாடல் 236
பாரப்பா வியாழதிசை கேது புத்தி
பாழாகும் மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் ஆறதாகும்
செம்மையில்லா அதன் பலனை செப்பக்கேளு வீரப்பா வியாதியது கூடிக்கொல்லும்
விதமில்லா மனைவிதன்னால் நிலைவிட்டுப் போவான் சாரப்பா சத்துருவும் சதஞ்செய்யவருவான்
சகலதன பாக்கியமும் க்ஷணத்தில்போமே
பாடல் விளக்கம்
வியாழ மகாதிசையில் கேது பகவானின் பொசிப்புக் காலம் தீது 11 மாதம் 6 நாள்களாகும். இன்பம் நல்காத அக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கேட்பாயாக! கொடிய வியாதியினால் மரணமடைதலும், இதமாக நடந்து கொள்ளத் தெரியாத மனைவியினால் மனமுறிந்து பிரிந்து செல்வதும் நேரிடும். பகைவர்களும் பலவிதத்தில் சேதம் விளைவிக்க வந்து சேர்வார்கள், சகல ஜனங்களால் கிடைத்த அனைத்து பாக்கியமும் ஒரு கணத்தில் மறைந்து போம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
வியாழன் மகாதிசை, சுக்கிர பலன்கள்
பாடல் 237
போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி பொருள்காணு மாதமது முப்பத்திரண்டு ஆமென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு அருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள் சுபமென்ற சோபனமும் மனமகிழ்ச்சியுண்டாம் சுகமான கன்னியுடன் சுகமுடனேவாழ்வன் நாமென்ற நாடுநகர் கைவசமேயாகும் நன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வன்
பாடல் விளக்கம்
வியாழ மகாதிசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் அருளே உருவான திருமகள் தானே விரும்பி வந்து உறைவாள். சுபசோபனங்கள் ஏற்படும். மனமகிழ்ச்சியுண்டாகும். சுகம் தரக்கூடிய கன்னிகையுடன் இன்பமாக வாழ்வான். நாடு நகரங்கள் தனதெனக் கைவசமாகும், இந்நிலவுலகில் நன்மை மிகுந்து புகழுடன் வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
வியாழன் மகாதிசை, சூரிய புத்திப்பலன்கள்
பாடல் 238
வாமென்ற வியாழதிசை சூரியபுத்தி வகையுட மாதமது ஒன்பதாகும் தாமென்ற நாளதுவும் பதினெட்டாகும் தன்மையுடன் அதன்பலனை சாற்றக்கேளு பரமென்ற பரதேசி யாகிப்போவான் பாங்கான மடபதியில் பரமகுரு ஆவான் ஞானமென்ற பதியில் நின்று யோகநிலையை ஞாபகத்தில் சிவனடியை மறவான்காணே
பாடல் விளக்கம்
வியாழமகாதிசையில் சூர்யபகவானின் பொசிப்புக் காலம் 9 மாதம் 18 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன், கேட்பாயாக! இல்லறத்தை நீத்து துறவறத்தைப் பூண்டு பரதேசியாகிப் போதல் நேரும். சிறப்புடைய மடத்தில் மடாதிபதியாய்ப் பரம குருவாய் ஆதலும் நேரும், உண்மையான அறிவு வழி (ஞானம்) நிலையில் நின்று யோகநிலை கொண்டு நினைவில் சிவனை நிறுத்தி அவனடி மறவாதவனாக இருப்பான். இதனையும் நீ காண்க என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
வியாழன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்
பாடல் 239
காணவே வியாழதிசை சந்திர புத்தி கனமுள்ள மாதமது பதினாறாகும் கோணவே அதன் பலனை சொல்லக்கேளு சுகமுடைய கலியாணம் சோபனங்களுண்டாம் பேணவே சிவிகை முத்து வெண்குடையுமுண்டாம் பெரிதான ராசாவால் பெருஞ்செல்வமுண்டாம் பூணவே தாய்தந்தை மனைவியுடன் புத்திரன் புகழுடன் வாழ்ந்திருப்பான் பூலோ கந்தன்னில்
பாடல் விளக்கம்
வியாழ மகாதிசையில் சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 4 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களான: நலம் தரத்தக்க வகையில் திருமணம் நிகழ்தலும் சுப சோபனங்களும் உண்டாகும். பல்லக்கு, முத்தாபரணம். வெண்குடை ஆகியன விரைந்து வந்து சேரும். பெருமையுடைய அரசர்களால் வெகுதனம் உண்டாகும். ஈன்ற தாய், தந்தை, மனைவி மக்களுடன் நிலைத்த புகழ் உடையவனாகி இவ்வுலகில் பெருமையுடன் வாழ்ந்திருப்பன் இச்சாதகன் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
வியாழன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்
பாடல் 240
தன்னிலே வியாழதிசை செவ்வாய்புத்தி தன்மையில்லா மாதமது பதினொன்றாகும் விண்ணிலே நாளதுவும் ஆறதாகும் வீறான பலனதுவை விளம்பக்கேளு புண்ணிலே அக்கினியால் வியாதிகாணும் பூமியினால் விளைவுகுன்றும் மாடாடுசாகும் விண்ணிலே போனாலும் சத்துருவுண்டு வீணான விலங்கதுவும் விதிவசமேசாகும்
பாடல் விளக்கம்
வியாழமகா திசையில் செவ்வாயின் பொசிப்புக்காலம் 11மாதம் 6 நாட்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: புண்களாலும், அக்னியாலும் நோய் வந்தடையும் பூமியில் விளைச்சல் குறைந்துபோகும். கன்றுகாலிகள் மரணமடையும் ஆகாயத்திலே பறந்து சென்றாலும் அங்கேயும் பகைவர் உளராவர். சிறைவாய்ப் படுதலும் அதனால் துன்புறுதலும் விதிவசமே என்று விதிவசமே என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
பாடல் 241
ஆகுமே வியாழ திசை ராகுபுத்தி அருளில்லா மாதமது யிருபத்தெட்டு போகுமே நாளதுவு மூவெட்டாகும் பொல்லாத அதன்பலனைப் புகலக்கேளு வாகுமே வியாதியது பீடிப்பாகும் மனைவியரும் புத்திரரும் மாண்டுபோகும் யேகுமே சத்துருவும் இடஞ்சலுண்டாம் இதங்கேடு பண்ணிவைக்கும் யிம்மையுடன்கேளே
பாடல் விளக்கம்
வியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: தேக நலத்தைக் கெடுக்கும். வியாதிகள் வந்துசேரும். மனைவி, புத்திரர் ஆகியோர் மரணமடைதலும் நேரும். பகைவரால் வெகுபயம் உண்டாகும். அவரால் இடைஞ்சல்கள் ஏற்படும். காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.