சூரிய திசை பலன்கள்- புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் சூரிய திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

சூரிய மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

பாடல் 197

கூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு குணமுள்ள புத்திநாள் நூத்தெட்டாகும் பாரப்பா அக்னியால் பீடையுண்டு பாங்கான அபமிருத்துப் பொருளுஞ்சேதம் ஆரப்பா அறிவாளர்கள் பிதாமிருத்தியு அரிதான வாணிபஞ்செல்யாகாது நஷ்டம் கோளப்பா கண்ணோவாங் கனலே மீறும் கொடுமையுள்ள நாளென்று கூறினோமே.

பாடல் விளக்கம்:

கதிரோன் என்றழைக்கப்படும் சூரிய மகாதிசை வருடம் 6 ஆகும். இதில் சூரிய பகவானின் பொசிப்பு நாள் 108 ஆகும். இக்கால கட்டத்தில் இவரது திசை நடக்கும் ஜாதகனுக்கு நெருப்பினால் பீடை ஏற்படும். உறவினர் பகையாகும். அபமிருந்து தோடம் ஏற்படும். வெகுவான பொருட்சேதம் நிகழும். தந்தையாருக்கு அரிஷ்டம் ஏற்படுவதுடன் கண்ணோய் ஏற்படுதலும் ஜுர உபாதை நேருதலும் ஏற்படும். கொடுமையான நாள்களாக இருக்கும் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 198

கூறினோம் விதிசையில் சந்திரபுத்தி குணமான மாதமது ஆறதாகும் தேறினோம் அதன்பலனை செப்பக்கேளு தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம் ஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம் அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும் தேறினோ மிரவிசந்திரன் பொசித்தநாளில் தீங்கிலா நாளென்று தெளிந்துகாணே

பாடல் விளக்கம்:

இச்சூரிய மகாதிசையில் சந்திரனின் பொசிப்புக்காலம் 6 மாத காலங்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பலனைச் சொல்கிறேன். கேட்பாயாக! கெடுதலே இல்லாத தனலாபம் வாய்ந்து சொத்து சேர்க்கை மிகும். நோயுபாதை இருப்புன் அவை நீங்கித் தேகமானது நலம்பெறும். அரசர்களால் பெருமையும் பாராட்டும் பரிசும் வந்தடைவதால் வெகுவான மகிழ்ச்சியுண்டாம். எனவெ இரவி திசையில் சந்திர புத்தி சிறப்பான நாள்களே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல் 199 

காணவே ரவிதிசையில் செவ்வாய்புத்தி கனதையுள்ள நாளதுவும் நூத்திருபத்தாறாம் தோணவே அதன் பலனைச் சொல்லக்கேளு சொல் பெரிய பூமிதனம் செல்வமாடும் நாணவே நடைகாலி நன்றாய்ச் சேரும் நன்மையுடன் நவதானியம் விளைவுமாகும் பூணவே பூபாலன் செவ்வாய்தானும் புகழ்ந்து மனைவீடகத்தில் வாழலாமே.

பாடல் விளக்கம்:

மேலும் இச்சூரிய மகாதிசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் 126 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகனுக்கு ஏற்படும் பலன்களாவன: பிறரால் புகழப் பெறும் தோரணை நேரும்; சொல்லுதற்குரிய நல்ல பூமி வாய்த்தலும், தனலாபம் ஏற்படலும், செல்வச் செழிப்பும் கன்று காலிகளும் பொருட் சேர்க்கையும் ஏற்படும். விளைச்சல் பெருகி அதனால் நற்பொருட்சேர்க்கையும் சுபகாரியங்களும் மனையில் நிகழும். நவதானிய விளைவு மிகுதலால் அரச செல்வம் பெற்றவன் என்று பிறர் போற்றும் பெருமையும் புகழும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். 

சூரிய மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 200 

ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி ஆகாதமாதம் பத்து நாள் மூவெட்டாகும் போமென்ற அதன்பலனைப் புகலக்கேளு பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும் நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம் நலமில்லா வியாதியது பீடிப்பாகும் தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும் தகவில்லா நாளென்று தனித்து நில்லே

பாடல் விளக்கம்:

இன்னும் இச்சூரிய மகாதிசையில் கரும்பாம்பு எனக் கூறப்படும் இராகுவின் பொசிப்புக் காலம் மிக ஆகாத தொன்றேயாகும். இவனது பொசிப்புக் காலம் பத்து மாதம் இருபத்தி நான்கு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: பொன் பொருள் சேதமாகும். பெண்நாசமும் உண்டாகும். சத்துருக்களுடன் சண்டையிடுதல் போன்ற தீயன நிகழும். உடல் நலத்தைப் பீடிக்கும். கொடிய வியாதிகள் வந்தடையும், மனைவி மக்களைப் பிரிந்து வாழச் செய்யும். இவனது பொசிப்புக் காலத்தை நலமில்லாத நாள்களே என்று துணிந்து சொல்லுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை குரு புத்திப் பலன்கள்

பாடல் 201

நில்லென்ற ரவிதிசையில் வியாழன்புத்தி நேர்மையுள்ள நாளதுவும் யெரனூத்தி யெண்பத்தெட்டு வில்லென்ற அதன் பலனை விரித்துச் சொல்வோம் விவரமாய் சம்பத்தும் தனதானியமுண்டாம் சொல்லொன்றும் தவறாது வினையகலும்பாரு சொல்லப்பா நாள்யின்ப மெய்து வாழலாகும். புல்லென்று புத்திரனும் ஆகும் பாரு பொல்லாத சத்துருவும் வணங்குந்தானே

பாடல் விளக்கம்

மேலும் இந்த இரவி திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 288 நாள்களாகும்.நன்மை தரும் இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன; விவரமுடன் நன்மைதரத் தக்க சம்பத்து ஏற்படின் சில சிறு சுபவிரங்களும் ஏற்பட்டு தனஹானியுண்டாகும். என்சொல் என்றும் தவறாது, தீவினைகள் அகலும். மிகவும் குறைவற்ற இன்பம் ஏற்பட்டு சுக சௌக்யத்துடன் வாழும் நிலை ஏற்படும். இதுவரை ஏற்பட்டிருந்த சத்துருக்களும் இச்சாதகனை வணங்கி மித்துருவாகிச் சுகிப்பன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, சனி புத்திப்

பாடல் 202

வணங்குவார் ரவிதிசையில் சனிபுத்திகேளு வாக்கிலா நாளதுவும் மாதம்பதினொன்று இணங்குவார் நாளதுவும் முன்னான்காகும் இதனுடைய பலத்தையினி யியம்பக்கேளு குணங்குவார் சத்துருவும் மன்னவருந்தானும் குலைபொருளுஞ் சேதமே ஆக்கிவைப்பார் பிணங்குவார் பிதிருமா ரகமேயாவர் பிலன்கேடு பண்ணிவைப்பான் சனியன் தானே

பாடல் விளக்கம்

வணங்குவதற்குரிய இரவியின் திசையில் இவனது மகனான சனிபகவானின் பொசிப்புக்காலம் பதினொரு மாதம் பன்னிரெண்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் வேறுபட்ட சத்துருக்களாலும் அரச பீடையாலும் பெருந் தனக்கேடு ஏற்படும். அதேபோல் பிதுர் மரணமும் எதிர்பாராவண்ணம் ஏற்படும். கெடுதியான பலன் களையே சனிபகவான் ஏற்படுத்திவைப்பார் என்று கூறுக என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, புதன் புத்திப்

பாடல் 203 

தானென்ற ரவிதிசையில் புதனார் புத்தி சாதகமாம் மாதம் பத்து நாளாறாகும் ஆனென்ற அதன்பலனை அரையக்கேளு அடங்காத வியாதி வந்து பின்னிக்கொல்லும் வானென்ற வான்பொருளுஞ் சேதமாகும் வாகுடைய புத்திமதி நாசமாகும் கோனென்ற குடிகேடு பண்ணிவைக்கும் கொடுமையுள்ள நாள்தனிலே குடிகேடாமே

பாடல் விளக்கம்:

தானென்று கூறத்தகும் சூரிய மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பாதகமானதே. இது பத்து மாதம் ஆறு நாள்கள் நிகழும். இக்கால கட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: தீராத வியாதி வந்து தேக நலத்தைக் கெடுக்கும் வானளாவிய சிறந்த செல்வமும் பொருளும் சேதம் அடையும். இதுவரை நன்மைகளையே அளித்து வந்த புத்தியானது நாசமாகும். அரசனைப் போல் வாழ்ந்த இச்சாதகனின் குடும்பத்தை நாசமடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, கேது புத்திப்

பாடல் 204 

ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி ஆகாத நாளதுவும் நூத்திருபத்தாறு போமென்ற அதன்பலனைப் புகலக்கேளு பொருந்துகின்ற காரியங்கள் சேதமாகும் நாமென்ற மனைவிதன்னை நாசம் பண்ணும் நலமில்லா சத்துருவும் நல்குவான்பார் தாமென்ற இருந்தவிடம் விட்டேகவைக்கும் தரணிதனில் தெண்டம்வரும் சார்ந்துகேளே

பாடல் விளக்கம்

இன்னுமொன்று இந்த இரவியின் திசையில் செம்பாம்பு என்று கூறப்படும் கேதுபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பொல்லாத நாள்களேயாகும். அதுவும் 125 நாள்களேயாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: காரியக்கேடு ஏற்படும். மனைவி நாசத்தை ஏற்படுத்தும். கேடு செய்யும் சத்துருக்களிடம் சென்று சரணடையச் செய்யும். இருந்தமனை ஊர்விட்டு ஓடிவிடச் செய்யும். பூமியில் பலவிதமான தெண்டங்களை அடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சூரிய மகாதிசை, சுக்கிர புத்திப்பலன்கள்

பாடல் 205 

கேளப்பா ரவி திசையில் சுக்கிரபுத்தி கெணிதமுள்ள மாதமது பனிரெண்டாகும் ஆளப்பா அதன்பலனை அரையக்கேளு ஆகாத சூரியனுடன் சூஸ்திரவாய்வு பாளப்பா ஆக்குமடா திரேகந்தன்னை பகையதுவுண்டாகும் பலனோயில்லை வாளப்பா மனையாட்டி சிலுக்குண்டாகும் வகையுடனே வான் பொருளும் கேடாம் சொல்லே

பாடல் விளக்கம்

மேலுமொன்று இந்த இரவியின் திசையில் சுக்கிரபுத்தி 1 வருட காலமாகும். இச்சுக்கிர பகவானின் பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: சுக்கிரனது பகைவன் சூரியனாதலால் சூத்திர மிக்க வாய்வு உபாதை ஏற்பட்டு திரேக நலத்தைக் கெடுக்கும். பகைமைகளை உண்டாக்கும். நற்பலன்கள் வாய்த்தல் ஏற்படாது. மனைவிக்குப் பலவித அரிஷ்டங்களை உண்டாக்கும். திரண்ட பொருட் சேதம் எற்படும். நற்பலன்கள் விளையாது என்று கூறுவாயாக எனப் போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

Post a Comment

Previous Post Next Post