கரணமும் அதன் பலன்களும்

கரணம் 11 வகைப்படும். ஒரு திதியின் பாதியளவே கரணம் ஆகும்.11 கரணங்களுக்குண்டான பலன்களை இப்போது பார்ப்போம்.

கரணம் உயிரினம்
பவம் சிங்கம்
பாலவம் புலி
கௌலவம் பன்றி
தைதுலை கழுதை
கரசை யானை
வணிசை எருது
பத்திரை கோழி
சகுனி காகம்
சதுஷ்பாதம் நாய்
நாகவம் பாம்பு
கிம்ஸ்துக்கினம் புழு

11 கரணங்களுக்கும் அவற்றிற்குண்டான பலன்களை பற்றி இப்போது பார்ப்போம்

பவ கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

பவ கரணம் சிங்கத்தை குறிக்கும். பவகரணத்தில் பிறந்தவர்கள் சிங்கத்தை போல எக்காரியத்திலும் பின் வாங்க மாட்டார்கள், தைரியம் உடையவர்கள். கூர்ந்து ஆராய்ச்சி செய்யும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். சுகமுடையவர்களாகவும், நன்னடத்தை உடையவர்களாகவும் இருப்பார்கள். மென்மையான தலைமுடி உடையவர்களாக இருப்பார்கள். தான் கூறியதை பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.எந்த ஒரு செயலையும் தலைமை தாங்கி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

பாலவ கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

பாலவ கரணம் புலியை குறிக்கும். பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் புலியை போல பதுங்கி பாயும் தன்மையுடையவர்கள். இவர்கள்  சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். நீங்காத செல்வமுடையவர்கள். தருமம் செய்ய விருப்பமுடையவர்.இக்கரணத்தில் பிறந்தவர்கள்  நற்குணம் உடையவராகவும் இருப்பார். தன் உறவினர்களை அரவணைத்து செல்லும் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். தனியாக செயல்படும் விருப்பம் உள்ளவர்கள் (இவர்களுடைய விஷயத்தில் பிறர் தலையிட்டால் இவர்களுக்கு பிடிக்காது).

கெளலவ கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

கௌலவ கரணம் பன்றியை குறிக்கும். இக்கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள் அல்லது அரசாங்கம் மூலம் ஏதேனும் பலன் அடைவார்கள். ஆச்சாரமுடையவர்கள், தந்தை தாய் மீது பற்றுள்ளவர்கள், நிலபுலன்களைச் சம்பாதிப்பவர்கள், பராக்கிரமம் உடையவர்கள்,வாகன வசதியுடையவர்கள்.கூட்டு குடும்பமாக வாழ விருப்பமுடையவர்கள்.

தைதுலை கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

தைதுலை கரணம் கழுதையை குறிக்கும். தான் சம்பாதித்த பொருளை அவ்வளவு எளிதில் பிறருக்கு தந்து விடமாட்டார்கள். கஞ்சத்தனம் மிக்கவர்கள். அதேசமயம் இக்கரணத்தில் பிறந்தவர்களை உடன் வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு காரியம் செய்தால் அந்த செயல் சிறப்பாக இருக்கும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் நிச்சயம் இருக்கும்.

கரசை கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

கரசை கரணம் யானையை குறிக்கும். கரசை கரணத்தில் பிறந்தவர்கள் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். தன் குடும்பத்திற்காக எதுவும் செய்வார்கள்.எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவர்கள், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவர்கள். சாப்பாடு மீது பிரியம் உடையவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். ஒரு முறை ஒரு செயலை பார்த்தாலே அந்த செயலை திரும்பி செய்துவிடுவார்கள் அந்தளவு புத்தி கூர்மை உடையவராகவும் இருப்பார்கள்.

வணிசை கரணத்தில் பிறந்தால் என்ன பலன்

வனிசை கரணம் எருதை குறிக்கும். கற்பனை திறன் மிக்கவர்கள். எதிர்பாலினத்தவரை கவரக் கூடியவர்களாக இருப்பார்கள்‌. ஓய்வெடுக்கும் நேரத்தில் பலவற்றை யோசனை செய்வார்கள்‌. எளிதில் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள்.தூங்க செல்வதற்கு முன் அந்த நாளில் என்னென்ன நடந்தது என்பதை அவர்கள் யோசித்து கொண்டிருப்பார்கள். கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள்.குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.

பத்திரை கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

பத்திரை கரணம் கோழியை குறிக்கும். அகழ்வாராய்ச்சி மற்றும் புலனாய்வு துறையில் பத்திரை கரணத்தை சேர்ந்த பலர் இருப்பார்கள். ரகசியத்தை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சந்தேக புத்தி உடையவர்கள். மன சஞ்சலம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபடுவது இவர்களுக்கு சிறப்பை தரும்.

சகுனி கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

சகுனி கரணம் காகத்தை குறிக்கும். இக்கரணத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்ப பாரம்பரியத்தை காக்க கூடியவர்களாக இருப்பார்கள். புத்தி கூர்மையால் எதிரிகளை வெல்ல நினைப்பார்கள். ‌அழகானவர்கள், மிகுந்த செல்வம் உடையவர்கள், தைரியம் உள்ளவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் பிரச்சினை  என்றால் முதல் ஆளாக முன்நின்று தீர்த்து வைக்கும் குணமுடையவர்கள்.

சதுஷ்பாத கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

சதுஷ்பாத கரணம் நாயை குறிக்கும். இக்கரணத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு செய்த உதவியை எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள். நன்றியுடையவர்களாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் ஏமாற்றாமல் வேலை செய்வார்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்ற நினைப்பார்கள். கோபம் இவர்களுக்கு அதிகமாக வரும். தங்கள் குடும்பத்தை தவிர வெளியாட்களிடம் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள்.

நாகவ கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

நாகவ கரணம் பாம்பை குறிக்கும். இக்கரணத்தில் பிறந்தவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவராக இருப்பார்கள். பழிவாங்கும் குணமுடையவர்கள். சுவையான உணவை உண்ண விரும்புவார்கள். தங்கள் முன்னோர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். கடினமான வார்த்தைகளை பேசுவார்கள். உறவுமுறைக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அவர்களுடைய தாத்தாவை போலவோ அல்லது பாட்டியை போலவோ இருப்பார்கள்‌.

கிம்ஸ்துக்கினம் கரணத்தில் பிறந்தால் என்ன பலன் 

கிம்ஸ்துக்கினம் கரணம் புழுவை குறிக்கும்.இவர்கள் தாய் தந்தையர் மீது பற்றுள்ளவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுக்காக எதையும் செய்வார்கள். ஆன்மிக நாட்டம் உடையவர்கள். உலக அறிவு உடையவர்கள். வேத சாஸ்திரங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள்‌. கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.

Post a Comment

Previous Post Next Post